
நிலவுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான் விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான மூலக் கூறுகள் இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டு பிடித்தது. இதையடுத்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், இதற்கான முயற்சிகளில் இறங்கியது.நிலவின் மேற்பரப்பில் ராக்கெட்டை மோதச் செய்து, அதனால் ஏற்படும் பள்ளங்களில் தண்ணீர் உள்ளதா என, கண்டறியும் சோதனையை, கடந்த மாதம் 9ம் தேதி நாசா மேற்கொண்டது.
இதில், தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து, நாசாவைச் சேர்ந்த அந்தோணி கொலாபிரட் கூறுகையில்,""நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்ட 20 முதல் 30 மீட்டர் வரை ஆழமுள்ள பள்ளங்களில் நாங்கள் எதிர்பார்த்ததை விட, குறிப்பிடத் தக்க அளவில் அதிக தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது முதல்கட்டமாக கிடைத்த தகவல் தான். ஆய்வு முடிவுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன,'' என்றார்.
நாசா அதிகாரிகள் கூறுகையில்,"நிலவில் தண்ணீர் இல்லை. அது ஒரு வறட்சியான பிரதேசம் என, நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது. தற்போது அங்கு தண்ணீர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது, உண்மையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ள உதவும்' என்றனர்.
No comments:
Post a Comment