
என் நடிப்புத் தொழிலில் நான் எந்த வழியைப் பின்பற்றுவது என்று புரியாது குழப்பத்திலிருந்த அந்த நேரத்தில் தான், நடிகவேள் எம்.ஆர்.ராதா அண்ணன், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு நடிகராக வந்தார். தன்னை நல்லதொரு நடிகனாக ஆக்கிக்கொண்ட பின்தான், அந்தக் கம்பெனிக்கு வந்தார். அவருடைய சமயோசித அறிவும், எந்த வேடத்தைப் போட்டாலும், அது சிறிய வேடமானாலும், பெரிய வேடமானாலும், உரையாடல்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சரி, அந்த வேடத்தை எம்.ஆர்.ஆர்., ஏற்றுக்கொண்டார் என்றால், அதுபோதும்; அந்தப் பாத்திரத்திற்குத் தனித்தகுதி ஏற்பட்டுவிடும்.
என் நாடக வாழ்க்கையில், எம்.ஆர்.ஆருடைய நடிப்பை நாடகத்தில் காணவும், அதே நாடகங்களில், நானும் நடிக்க கிடைத்த நாட்கள் குறைவாயினும், எனக்கு அது ஒரு காலகட்டமாகவே இருந்தது. கஷ்டகாலமல்ல, காலகட்டம்.
என் நடிப்புலகில், எனக்குப் பெரிய,புதிய ஒரு திருப்பத்திற்குக் காரணமாயிருந்தது ஒரு காலகட்டம் என்றால், அது மிகையாகாது. அந்தத் திருப்பத்திற்கு ஓரளவில் எம்.ஆர்.ஆரும் காரணமாயிருந்தார் என்பதைச் சொல்வதில், நான் பெரிதும் மகிழ்ச்சியே அடைகிறேன்.
— 'நான் ஏன் பிறந்தேன்' நூலில் எம்.ஜி.ஆர்.
No comments:
Post a Comment