அயராத உழைப்பால் இனிப்பு தயாரிப்பு தொழிலில் நாட்டிலேயே முதன்மை பெற்ற நிறுவனமாக அடையாறு ஆனந்த பவன் திகழ்வதாக அதன் நிர்வாக இயக்குநர் கே.டி. ஸ்ரீநிவாசராஜா தெரிவித்தார்.டைனமிக் யூத் குளோபல் நிறுவனத்தின் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில்முனைவோருக்கான வழிகாட்டும் கருத்தரங்கில் அவர் பேசியதாவது:நாம் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே உலகம் நம்மை மதிக்கும். நான் உணவு தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டதால், எனக்கு பெண் தர உறவினர்கள் தயங்கினர்.
ஆனால், எனது தாயின் வழிகாட்டுதலால் 4 பேர் சேர்ந்து தொடங்கிய எனது நிறுவனம் இப்போது தில்லி முதல் நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் பரவி வளர்ந்துள்ளது.
வலிமை பெற வேண்டுமெனில் கூட்டு முயற்சி அவசியம். அனைத்து விஷயங்களும் நமக்குத் தெரிந்துவிட்டதாக கருதக்கூடாது. பிறர் கூறும் ஆலோசனைகளையும் கேட்டு நாம் முடிவு செய்தால் வெற்றி கிடைக்கும்.
நமது கைகளே உண்மையான மூலதனம். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நாம் செய்யும் தொழிலில் நேர்மை ஆகியவையே வெற்றி தரும் சூத்திரங்கள் ஆகும். பணியாளர்களை நமது தோழர்களாகவும், உறவினர்களாகவும் கருத வேண்டும்.
கூட்டு முயற்சியால், நிறுவனத்தின் ஆண்டு வணிகம் (விற்று முதல்) இப்போது ரூ. 400 கோடியாக உயர்ந்துள்ளது என்றார் ஸ்ரீநிவாசராஜா.
இக்கருத்தரங்கில், தொழில் துறையில் சாதனை படைத்ததற்காக அவருக்கு சிறப்பு சான்றிதழை, நிறுவனத் தலைவர் டி. ஜோசப் பென்சிகர் வழங்கினார்.
No comments:
Post a Comment