
அமெரிக்க ஜனாதிபதியாக கென்னடி இருந்தபோது (1962'ல்) அமெரிக்கக் குழந்தைகளுக்கு யானைக்குட்டி ஒன்றை சிவாஜி கணேசன் பரிசாக வழங்கினார். அமெரிக்காவில், இந்தியானா பொலிஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவுக்கு அந்த யானைக்குட்டி அனுப்பப்பட்டது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும், சிவாஜிகணேசன் பற்றிய விவரங்களை கென்னடி விசாரித்தார். சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சிவாஜி பற்றிய முழு விவரங்களையும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அவற்றைப் படித்துப் பார்த்த கென்னடி, கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ், சிவாஜிகணேசனை அமெரிக்க அரசின் விருந்தினராக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்வதற்கு அழைக்குமாறு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார். அதன்படி சிவாஜிக்கு அழைப்பு வந்தது.
இந்தியாவில் இருந்து நடிகர் ஒருவர் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது அதுவே முதல் தடவை. அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு முன்பாக, "பலே பாண்டியா" படத்தை சிவாஜி முடித்துக் கொடுக்க வேண்டி இருந்தது. 11 நாட்களில், அந்தப் படத்தில் தன்னுடைய வேலை முழுவதையும் சிவாஜி நடித்து முடித்தார்.
இப்படத்தில் சிவாஜிகணேசன் 3 வேடங்களிலும், எம்.ஆர். ராதா 2 வேடங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மும்பை வழியாக ரோமாபுரிக்கு போய்ச்சேர்ந்தார், சிவாஜி. பின்னர் பாரிஸ், லண்டன் ஆகிய நகரங்களில் சில நாட்கள் தங்கிவிட்டு, அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகருக்குப் போய்ச்சேர்ந்தார்.
அமெரிக்காவில் 2 மாத காலம் சிவாஜி சுற்றுப்பயணம் செய்தார். அவருக்கு அமெரிக்க அரசாங்கம் 2 கார்களையும், 2 செய லாளர்களையும் கொடுத்தது. ஒரு நாள் செலவுக்கு ("பாக்கெட் மணி") 160 டாலர் கொடுத்தது. அமெரிக்க நடிகர் _ நடிகைகளை சந்திப்பதற்கும், ஸ்டூடியோக்களை பார்வையிடுவதற்கும் ஏற்பாடு செய்து இருந்தது.
உலகின் தலைசிறந்த நடிகர் என்று புகழ் பெற்றிருந்தவர் மார்லன் பிராண்டோ. "ஜுலியஸ் சீசர்", "ஆன் தி வாட்டர் பிரண்ட்", "சயோனரா" முதலிய படங்களில் நடித்தவர். "ஆன் தி வாட்டர் பிரண்ட்" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, ஆஸ்கார் பரிசு பெற்றவர்.
அறிஞர் அண்ணா ஒரு கூட்டத்தில் பேசும்போது, "சிவாஜிகணேசனைப் போல் இன்னொருவர் நடிப்பது சிரமம். ஒருவேளை மார்லன் பிராண்டோ முயற்சி செய்தால், சிவாஜிக்கு இணையாக நடிக்கக்கூடும்" என்று குறிப்பிட்டிருந்தார். அத்தகைய மார்லன் பிராண்டோ, சிவாஜிகணேசனை வரவேற்று விருந்து கொடுத்தார்.
அப்போது, "அக்ளி அமெரிக்கன்" என்ற படத்தில் மார்லன் பிராண்டோ நடித்துக் கொண்டிருந்தார். சிவாஜியுடன் நீண்ட நேரம் மார்லன் பிராண்டோ பேசிக் கொண்டிருந்தார். "இந்திய சினிமா படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று சிவாஜி கேட்டார். "சத்யஜித்ரே எடுத்த படத்தைப் பார்த்தேன். கண்ணீர் வந்துவிட்டது" என்றார், பிராண்டோ.
"இந்திய கிராமங்களில் தெருக்களில் சாக்கடை ஓடுவது... அங்கு குழந்தைகள் விளையாடுவது... வறுமை காரணமாக நடக்கும் விபசாரம்... இத்தகைய காட்சிகள் வெகு இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தன. இதனால் அக்காட்சிகள் என் மனதைத் தொட்டு, கண்ணீர் வரச்செய்தன. சத்யஜித்ரே, அப்படத்தை சிறப்பாக எடுத்திருந்தார்" என்று கூறிய மார்லன் பிராண்டோ, இறுதியில் "அது நல்ல பொழுதுபோக்குப்படம்" என்று குறிப்பிட்டார்.
அதற்கு சிவாஜிகணேசன், "நீங்கள் பணக்காரர். அதனால் எங்கள் குழந்தைகள் சாக்கடையில் விளையாடுவது, வறுமை காரணமாக விபசாரம் நடப்பது எல்லாம் உங்களுக்கு பொழுதுபோக்காக தோன்றுகிறது. சத்யஜித்ரே உங்களுக்காக இந்தப் படங்களை எடுக்கவில்லை. எங்களுடைய மக்களுக்காக எடுத்திருக்கிறார். எங்கள் மக்களில் பலர் ஏழைகள். அவர்கள் மாறவேண்டும், வறுமை ஒழியவேண்டும், நாடு முன்னேற வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்துவதற்காக அந்த மாதிரி படங்களை எடுக்கிறார்" என்று கூறினார்.
இதுபற்றி சிவாஜிகணேசன் பிறகு கூறும்போது, "நான் ஆங்கிலம் பேச பயப்படமாட்டேன். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளாசிவிட்டேன். மார்லன் பிராண்டோ கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். என் பேச்சுக்கிடையில் இரண்டு மூன்று முறை காபி குடித்துவிட்டார்! என்னுடைய அமெரிக்க சுற்றுப்பயணத்தில் மார்லன் பிராண்டோவை சந்தித்தது மறக்கமுடியாதது" என்று குறிப்பிட்டார்.
உலகப் புகழ் பெற்ற கவர்ச்சிக்கன்னி மர்லின் மன்றோவையும் சிவாஜி சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. காரில் நண்பர் வந்து சேருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சிவாஜி உரிய நேரத்தில் போய்ச்சேர முடியவில்லை.
சிவாஜிகணேசன் நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்றார். அவரை நயாகரா நகர மேயர் வரவேற்றார். அத்துடன் அவருக்கு ஒரு தங்கச்சாவியைக் கொடுத்து, "இன்று ஒரு நாள் நீங்கள்தான் இந்த நகரத்தின் மேயர். அதற்கு அடையாளம்தான் இந்த தங்கச்சாவி" என்றார்.
பிற நாடுகளில் இருந்து வருகிற மிக முக்கிய தலைவர் அல்லது பிரமுகர்களுக்குத்தான் இத்தகைய கவுரவம் நயாகரா நகரில் தரப்படுவது வழக்கம். சிவாஜிக்கு முன்னதாக இத்தகைய கவுரவத்தைப் பெற்ற இந்தியர் பிரதமர் நேரு மட்டுமே.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில், மலேசியாவுக்கு சிவாஜி சென்றார். அங்கு அன்றைய பிரதமர் துங்கு அப்துல் ரகிமானும், மலேசியத் தமிழர்களும் வரவேற்பு அளித்தனர்.
பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள தமிழர்களும் வரவேற்பு அளித்தனர். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி கணேசனை எம்.ஜி.ஆர். மாலை அணிவித்து வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சிவாஜியை நடிகர் , நடிகைகள் ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
No comments:
Post a Comment